முக்கிய செய்திகள்

Tuesday, November 8, 2011

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?


மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?


நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம். 
மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

இருக்க வேண்டியவை: அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை,  கருணை, சாந்தம், மன்னிப்பு, அடக்கம், அமைதி, மானம், ஒழுக்கம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, இன்னும் பல.....

இருக்கக் கூடாதவை:  பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், அவசரம், பொய் பேசுதல், சோம்பேறித்தனம், வஞ்சகம், திருட்டு, கொலை, கொள்ளை, சூது, பிறன்மனை நோக்குதல், இன்னும் பலப்பல.....
இது போல பல குணங்களோ பண்புகளோ இருந்தாலும் அவற்றில் முதன்மை குணம் என்னவாக இருக்க வேண்டும்? யோசித்து பார்த்துக் கொண்டே இருங்கள்... முடிவில் தெரிந்து கொள்வோம்.

இது ஒன்று மட்டும் இருந்தால் மற்ற எல்லா குணங்களும் பண்புகளும் இதற்கு பின்னால் வந்து விடும் என்பது என்னுடைய கருத்து. உங்களின் கருத்துகள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மனிதனின் நல்ல குணங்களையும் பண்புகளையும் பற்றி மட்டுமே இங்கு ஆராய போகிறோம்.....

முதலில் அன்பு, பாசம்... பாசமென்பது நம் பெற்றோர்களிடம், குழந்தைகளிடம் மற்றும் நம் உறவினர்களிடம் நாம் பாசமாக இருப்பது. அன்பென்பது நமக்கு தெரியாதவர்களிடம் அன்பை செலுத்துவது. எல்லாரிடமும் எப்போதும் அன்பாக இருக்க முடியுமா? எல்லாரிடமும் அன்பாக இருப்பவர்கள், எல்லா உயிர்களிடமும் (மனிதனை தவிர) அன்பாக இருக்கிறார்களா? அதுவும் இன்றைய காலத்தில்? ஆனால் எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும், கோபம் இருக்க கூடாது, நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும்.  ஏன்னென்றால், அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. ஆக, மனிதனுக்கு முதன்மையாக அன்பு/பாசம்/கருணை/சாந்தம்/பணிவு இருந்தால் போதுமா?
அடுத்து விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவர்கள். இவர்களை உலகம் இளிச்சவாயன் என்று கூறுகிறது. எல்லாவற்றையும் எப்போதும் விட்டுக் கொடுப்பவரை 'ஏமாந்த சோணகிரி' என்று சிரிக்கிறது. உங்களுக்கு உண்டான உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்க தேவையில்லை. ஏன்னென்றால்,ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி. ஆக, மனிதனுக்கு முதன்மையாக விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் போதுமா? பார்ப்போம்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது. முதலில், செய்த தவறை ஒத்துக் கொள்ள தைரியம் வேண்டும். அவனை மன்னிக்க பெரிய மனது வேண்டும்.  ஏன்னென்றால், மன்னிக்க தெரிந்தவனே மனிதன்! ஆனால், மன்னித்து ஏற்றுக் கொள்பவன் இறைவன்! ஆக, மனிதனுக்கு முதன்மையாக மன்னிக்கும் தன்மை/தைரியம்  இருந்தால் போதுமா?

ஒவ்வொன்றுக்கும் சில விளக்கங்கள் தரலாம். நீள் பதிவு ஆகி விடும் என்பதால்................ அடுத்ததாக அறம், ஈகை, தானம், உதவி, தவம், நன்றி, நட்பு, ஆர்வம், ரசனை - இவை எல்லாமே பொருள் இருப்பவர்களிடம் இருக்கும். பொருள் இல்லாதவர்களிடம் ...? இவை எல்லாமே மனிதனுக்கு தேவை தான். ஆனால், முதன்மையாக இருக்க வேண்டிய குணம் - ஒரு சின்ன கதை மூலம்:

அந்த காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்த தாயிடம், "பழம் நன்றாக உள்ளது, நன்றி" என்று சந்தோசமாக தெரிவித்தார். ஆனால், அந்த தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்த தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றார். சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை  பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்த தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். அதற்கு குரு, "சீடர்களே, அந்த தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளை சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதை சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, " சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்த தாயின் முன்பு செய்திருப்பீர்கள். அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்கு தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.

இந்த கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன? அந்த தாய் சந்தோசப்பட, குரு முகத்தை கூட சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்த பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment