முக்கிய செய்திகள்

Saturday, July 26, 2014

பொருள்வையில் பிரிதல் தலைவனின் இயல்பு !!!!


''வியாழனில் 4,331 நாட்கள் ஒரு வருடம், செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம், பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம், வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம், புதனில் 88 நாட்கள் ஒரு வருடம், என் அருமை மகளே... நீ விடுப்பில் வருவது பதினைந்து   நாட்கள். அதுதான் எனக்கு ஒரு வருடம்'' 


காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத் துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான்.

சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது...
இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை.

என்னதான் மகன்கள் இருந்தாலும், ஒரு தந்தைக்கு தன் மகள்தான் பிரியமானவளாக இருக்கிறாள். ''நான் பிறந்தபோது அம்மா பூரிப்படைந்தாள். அப்பா நீயோ அடுத்த நொடியில் இருந்து உனக்கான வாழ்வை விட்டுவிட்டு, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாய்'' அதுதானே உண்மை

என் பொண்ணுக்கு அதுதான் பிடிக்கும் என்று, பிடித்தப் பொருளை வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது தந்தையின் கடமை. அதற்குப் பிறகு, எல்லாவற்றுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யத் தொடங்குகிறார் தந்தை.


''அவனுக்கு ரெண்டு பொண்ணுப்பா'' என்று உறவுகளும் நட்பும் சொல்லும்போதே அது எவ்வளவு பெரிய பொறுப்பை தந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. பல இடங்களில் பெண் பெற்றவர் என்பது முன்னுரிமைக்கு வழிசெய்கிறது. காரணம் மகள் என்பவள் பாசத்துக்குரியவள்; மகள் என்பவள் குடும்பத்தின் பாதுகாவலி; மகள்தான் குடும்பத்தின் கௌவரம். இதுதான் உலகெங்கும் உள்ள பாசவலை

''அப்பா, என்னை மலை தாண்டியுள்ள ஊரில் கட்டிக் கொடுக்க வேண்டாம். கடல் தாண்டிய ஊரில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். பாதையில்லா ஊரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டாம். நான் நினைத்தால் காலையில் கிளம்பி உன்னை வந்து பார்த்துவிட்டு மாலையில் புகுந்த வீடு திரும்பும்படியான தூரத்தில் மாப்பிள்ளை பார்'' என்று கவிதையாய் சொல்கிறாள் ஒரு மகள். அதுதான் மகளின் தந்தைப் பாசத்துக்கு இலக்கணம்.

தாய் இறந்து போய்விட்ட குடும்பங்களில் உள்ள மகள்தான் அதற்குப் பிறகு அனைவருக்கும் தாயாகிறாள். திருமணத்தை நினைத்துக்கூட பார்க்காமல் தன் தந்தைக்கும் தம்பி தங்கைகளுக்கு தாயாகி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மகளுக்குப் பொருத்தமானவன் என்று தந்தை ஊர் ஊராக சல்லடை போட்டு சலித்து மாப்பிள்ளைத் தேடி நிச்சயம் செய்வதும், திருமணத்துக்கு முன்பே அந்த மாப்பிள்ளையைப் பார்த்து என் சம்பளத்தில் பாதியை தந்தைக்கு அனுப்புவேன் அதற்கு சம்மதமா என்று அந்த மகள் இரைஞ்சுவதும் எத்தனை பெரிய பாச வலை. இந்த உணர்ச்சியும் நேசமும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே மட்டும் நிலவும் பிரத்யேக உலகம். 



சிறு வயதிலேயே மகளுக்கான முக்கியத்துவம் தந்தையிடம் ஆரம்பித்துவிடுகிறது. இருப்பதில் அழகான ஆடை, உயர்வான அணிகலன், சிறப்பான கல்வி என்று தேடித் தேடி சேர்க்க ஆரம்பிக்கிறார் தந்தை. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குண்டுமணி குண்டுமணியாக தங்கத்தையும் வாங்கி சேர்க்கிறார். கணவன் வீட்டில் மகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக அத்தனை வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்கி கொடுக்கிறார். மகளின் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது செய்கிறார். அவர்களைத் தோளில் தூக்கி கொஞ்சி அதில் சுகம் காண்கிறார். இப்படி எத்தனையோ அவதாரம் எடுத்து மகளிடம் அன்பு வளர்க்கிறார்.

அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன் என்கிறது கண்ணதாசனின் பாடல் வரிகள். அப்படி தன் மகளுக்கு மகனாகும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறார் ஒவ்வொரு தந்தையும். நம் பண்டைத் தமிழ் மன்னர்கள் மகளை அண்டை தேசத்துடனான உறவுக்கு பாலமாக நினைத்தனர். எதிரி மன்னனை தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து நட்பு நாடாக ஆக்கிக்கொண்ட ராஜ தந்திரிகளாக விளங்கினர். இன்று ஒரு குடும்பத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த மகள், அன்று ஒரு தேசத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறாள்.

என்னதான் கணவன் வீட்டில் ராஜபோகமாக வாழ்ந்தாலும், தன் தந்தையின் நினைவும் பிறந்த வீட்டின் பற்றும் இல்லாத பெண்கள் உண்டா. தாய் வீட்டுக்கு போய்வரும் நாளைத்தான் அவள் வாழ்நாள் முழுவதும் நினைத்து அசைபோடுகிறாள். தந்தை மேலுள்ள ஈர்ப்புதான் அவளை கணவனிடம் தந்தையைத் தேடவைக்கிறது. பொதுவாகவே தாயிடம் மகனும் தந்தையிடம் மகளும் பாசமாக இருப்பார்கள் என்கிறது உளவியல். அதற்குப் பாலின ஈர்ப்புதான் காரணம் என்றும் விளக்கம் சொல்கிறது. ஆனால், அதையும் தாண்டி தகப்பன் மீது மகள் வைக்கும் பாசமும் மகள் மீது தந்தை வளர்க்கும் பாசமும் எந்த உளவியல் கோட்பாடுகளிலும் அடங்காது. அங்கே காரண காரியங்களைத் தாண்டிய அன்பும் பாசமும் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

Wednesday, July 23, 2014

உயிர் பதுமைகள்

குழந்தைகள் நம் உயிர்த்துளியில் உதித்த உன்னதப் பிறப்புகள். பஞ்சபூதங்களின் உயிர்ப் பதுமைகள். பேசும் சித்திரங்கள். பெற்றவரகளின் வாரிசாகத் திகழும் வருங்காலச் சந்ததிகள்.குழந்தைகளைக் கொஞ்சாதவர்கள், மழலைச் சொல் கேளாதவர்கள். சேட்டைகளை ரசிக்காதவர்கள் எவரேனுமுண்டோ?


பள்ளி விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னாலே குழந்தைகள் குதூகலம் ஆகிவிடுவார்கள். காரணம் அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில் தான் காணமுடியும். 

குழந்தைகள், தாத்தா, பாட்டியிடம் அச்சமின்றி மனம்விட்டு சிரித்துப் பேசி விளையாடி, உண்டு மகிழ்கிறார்கள்.. பெற்றோர்களிடம் கிடைக்காத பாசமும், அரவணைப்பும் அவர்களிடம்முழுமையாகக் கிடைக்கின்றன அவர்கள் சொல்வதைக் கேட்டு,தலையாட்டி, சம்மதித்து நடக்க விரும்பகின்றனர். குழந்தைகள் தாத்தா பாட்டிகளிடம் வளர்வதையும், அடிக்கடி அவர்களைப் பார்த்து மனம் பூரித்து மகிழ்வதையும் பெரிதும் விரும்புகின்றனர். அப்படிப் பார்க்க இயலாவிட்டால் உடல் நலம் குன்றி நோய்
வாய்ப்படுகின்றனர்

இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும் உணர்த்துவதற்காகவும், உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம்அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.


முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படிப்பதற்காக,சுற்றுலாவுக்காக என இந்தியா வரும் அயல்நாட்டவர்கள், இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக வாழ்வதை பார்த்து இங்கே திருமணம் செய்து கொண்டுசெட்டில் ஆவதையும் பார்த்திருக்கிறோம். 

அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையையும் வீட்டில்

 வைத்து பராமரிக்க முடியாமல்ரோட்டுக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது. 

அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம் உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது.

ஏன் இந்த நிலை? 

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார் முதலில் போடும் கண்டிஷன்,  'கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணும் மாப்பிள்ளையும்தனிக் குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான்.பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. 'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும் பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வர்றோம்..


ஏன் நீங்க வந்தா என்ன தப்பு?'என புரியாமல் பேசும் பெண்களை என்னவென்று சொல்வது. 

தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள் அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட ஆரம்பித்து திருமணம்,குழந்தைகள் வளர்ப்பு, அவர்களது படிப்பு,திருமணம் என அனைத்து கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின் பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான் இங்கே இருக்கிறார்கள். 


இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர்.

தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் இணையதளம்கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது. ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.குழந்தைகளை மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. 

வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும் மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும். இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார் ஷேக்ஸ்பியர் எனவே தான் முதியவர்கள் சககுழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர். 


பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும் ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சரி இனி பேருந்தில் நின்று கொண்டு வரும் முதியவர்களுக்காவது இடம் கொடுப்பீர்கள் தானே?