முக்கிய செய்திகள்

Sunday, July 12, 2015

கணவனும் மனைவியும்...

உறவுச் சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கிறீர்களா? முதல் காரியமாக, உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தினீர்களா, என்று யோசித்துப் பாருங்கள்…



கணவன் – மனைவிக்கிடையே, பெரும்பாலான பிரச்சனைகள் மேற்சொன்ன காரணத்தாலே விளைகின்றன. மனிதர்கள் அனைவருமே ஒருதனி தீவுதான். ஒவ்ஒரு மனிதருகுள்ளும் உணர்வுக்குவியல்களே புதைந்திருக்கும். தங்களுக்குள்ளேயே பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரிடமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழகுகிறோம். சிறு வயதில் கோபம் வந்தால் அடித்து உதைத்து அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உடன் பிறந்தோரிடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்ந்த பிறகு நம் மனதிற்குள்ளேயே ஒரு ஃபில்டர் வைத்துக் கொள்கிறோம். தேவையற்ற விஷயங்களை வடிகட்டி விடுகிறோம். அந்தரங்கமான உணர்வுகளுக்கு சென்சார் போட்டு விடுகிறோம். எடிட் செய்த விஷயங்களையும், உணர்வுகளையும் மட்டுமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். தொன்னூறு சதவீத தருணங்களில் நமக்குள்ளேயே பேசி, சிரித்து வெட்கப்பட்டு, ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பத்து, பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு திருமண பந்தத்திற்குள் நுழையும்போது மனசுக்குள் பூ பூக்கும். நமக்கென்று, நம்முடைய எல்லா உணர்வுகளையும் கொட்டித்தீர்க்க ஒரு துணை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கும்.

திருமணமான முதல் வாரம் முழுவதும் காதல்போதையில் மூழ்கிவிட்டு, ஹனிமூனுக்கென,.. மூட்டையைக் கட்டுவார்கள் பாருங்கள். இருவரின் முகத்திலும், கடைசியாகத் தெரியும் மனமார்ந்த உண்மையான சிரிப்பு அதுமட்டும்தான். தேனிலவுக்கு கிளம்பும் தம்பதிகளின் முகத்தில் தோன்றும் அந்த கடைசி புன்னகையை ஆசை தீரப் பார்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விட வேண்டாம். போனால் கிடைக்காது.

பத்து நாட்களுகு எந்த தொந்தரவுமில்லாத இனிமையான தனிமை என்ற கற்பனையில் மிதந்து செல்வார்கள். முதல் இரண்டு நாட்கள் பயணக் களைப்பு. ஊர் சுற்றதல் என ஓடிவிடும். அதற்கடுத்த நாட்களில் நிறை நேரம் இருப்பதால், ம்.. நாம நல்லா பேசி ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்கலாமே.. என்று கணவன் ஆரம்பித்து வைப்பார்.. நாக்கில் சனி புகுந்துவிட்டது என்று அர்த்தம்.

இருபத்ததைந்து வருடங்களில் தனக்கு நிகழ்ந்த அனைத்தையும், இருபத்து நான்கு மணி நேரத்தில் மனைவியின் தலைக்குள் புகுத்திவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் தன் சிறு வயது ஞாபகங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார். அந்த Chapter கொஞ்சம் interesting ஆக இருக்கும்.

பள்ளிக்கூடத்தல் தான் அடிவாங்கிய காட்சிகளைப் பற்றி விவரிக்கும்போது மனைவி விழுந்து விழுந்து சிரிக்கும் அழகில் மயங்கி இன்னும் விவரிப்பார். இதோடு நிறுத்தியிருந்தால் பரவபாயில்லை. மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது… என்று யாரோ உத்தமர் எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்ததைப் படித்தது இப்போதுதானா நினைவுக்கு வந்து தொலைக்க வேண்டும்..?

பள்ளிக்கூடத்தில் பக்கத்து பெஞ்ச் மீனாவை தான் சைட் அடித்ததை “அழகி” பார்த்திபன் ரேஞ்சுக்கு உருகி உருகி விவரிப்பார். அப்போதே மனைவியின்முகம் எண்ணைய் கத்தரிக்காய் போல் சுருங்கி விடும். இவருக்கு அதெல்லாம் கண்ணில்பட்டால்தானே.

தனக்கும் தன் தாய்க்குமிடையேயான பாசப் பிணைப்ப்பை பத்தி பத்தியாக விவரிப்பார். “நீ அவருக்கு பணிவிடை செய்வது உன் முதல் கடமை” என்று சந்தடி சாக்கில் Advice செய்வார். மனைவிக்கு இலேசாய் பொச்சிவ்னெஸ் எட்டிப் பார்க்கும். இதற்குப் போய் சண்டை போடலாமா என்ற தயக்கத்தில் அமைதியாயிருந்து விடுவார்.

தன்னுடைய உயிர்த் தோழனைப் பற்றியும், நட்பைக்கூட கற்பைப் போலெண்ணும் தன் உயர்ந்த குணத்தையும் பற்றி லெக்சர் அடித்து, மனைவியை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் அந்த கிளைமாக்ஸ் காட்சிக்கான விஷயத்தை தொடுவார்.

“குட்டி, நான் ஒரு விஷயத்தை சொல்வேன் தப்பா எடுத்துக்கக்கூடாது. என்னோட கஷ்டத்தைப் பகிர்ந்துக்கறதுக்கு உன்னைவிட்டா யார் இருக்கா?” என்ற பீடிகையில் ஆரம்பித்து, சுற்றி வளைத்து, ‘நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தேன்..” என்ற பாயிண்ட்டில் முடிப்பார்கள். “போன மாசம்தான் அவளுக்கு கல்யாணமாச்சு. எனக்கு மனசு தாங்கலை.. ஆனாலும் அம்மா மனசு நோக்க் கூடாதுனு உன்னைக் கட்டிக்கிட்டேன்…”

இதைக் கேட்க கேட்க அவளுக்கு வயிறெரியும். காதலிச்சே சரி கல்யாணம் பண்ணிக்க தைரியம் வேண்டாம். செய்யறதை செஞ்சுட்டு இப்படி பொம்பளை மாதிரி புலம்பறியே என்ற வெறுப்பு ஒரு புறமும், நேற்று படுக்கையறையில் ஞாபகம் வராத விஷயம் இப்ப ஞாபகம் வந்திடுச்சா? இப்ப உருக வேண்டிய அவசியம் என்ன என்ற கோபம் மறுபுறமும் பொங்க, சண்டை தூள் பறக்கும். அநேகமாய் எல்லா கணவன் மனைவிக்கிடையேயும் வரும் முதல் சண்டை இதுவாகத்தானிருக்கும்.

இத்தனை வருடங்களாக வளர்த்த அம்மா அப்பாவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத, அதற்கு தைரியமில்லாத உணர்வை மனைவியிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ஏன்…? இவ்வளவு வருடங்கள் இல்லாத மனச்சிக்கல் இப்போது புதியதாய் முளைத்து விட்டதா.

வாழ்க்கைத் துணையிடம் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்தான். ஆனால், இந்த காதல் விஷயத்தில் பிரயோஜனமிருக்கிறதா? தேவையற்ற சஞ்சலங்களை மனைவி மனதில் சுமத்துவதைத்தவிர, வேறு என்ன நடக்கிறது?

புதிதாய் ஏற்பட்ட ஒரு உறவில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இப்போது பாதுகாப்பாற்ற உணர்வு மட்டுமே மனைவிக்கு எஞ்சி நிற்கும். ஆரம்பகாலகட்டத்தில் “நீ ரொம்ப அழகா இருக்கே தேவதையே பூமிக்கு வந்துட்டதோ – உலக அழகி போட்டிக்கு நீ போகலாமே…” என்ற சம்பிரதாய வார்த்தைகளோடு நிறுத்திக் கேளுங்கள்.

ஒருவர் மீது ஒருவருக்கு பிடிப்பும், புரிதலும் ஏற்பட்ட பிறகு மனதை வாட்டும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளல் அவசியம்தான். ஆனால், உங்கள் மனதில் தோன்றும் எல்லா குழப்பங்களையும், பயங்களையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக உங்கள் துணையைப் பயன்படுத்தாதீர்கள்.

இத்தனை வருடங்களாக எப்படி சுயமாக அலசி ஆராய்ந்து பிரச்சனைளைத் தீர்த்தீர்களோ அதே போல் இப்போதும் நடந்து கொள்ளுங்கள். முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளையும் இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். சரியான நேரத்தில் சரியான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

சிலருக்கு விஷயத்தை எங்கு ஆரம்பித்து, எப்படி முடிப்பது என்றே தெரியாது. முற்றுப் புள்ளியே வைக்காமல், கமாவிற்கு மேல், கமாவாப் போட்டுபேசிக் கொண்டே போவார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக நேரடியாக சொல்லுங்கள். உங்களுக்கே குழப்பமாக இருகும். விஷயத்தைப் பற்றி அடுத்தவரிடம் பேச வேண்டாம்.

உணர்வுகளின் உச்சக்கட்டத்திலிருக்கும் போது, எந்த கருத்தையும் வெளிப்படுத்த வேண்டாம். மனம் ஒரு அமைதி நிலைக்கு வந்பின்பு பேசுவதே நலம். இல்லையெனில், வார்த்தைகள் தவறாக வெளிப்பட்டுவிடும். கோபமோ, வருத்தமோ எதுவாயிருந்தாலும் கொஞ்சம் ஒத்திப்போடுங்கள். அந்த உணர்வுகளின் வீரியம் குறைந்தவுடன் பிரச்சனையை அலசுங்கள். உங்களது பலவீனத்தை அப்படியே வெளிப்படுத்திடவிட வேண்டாம்.

சிலர், ஒரு உத்வேகத்தில் தங்களது மனக்குறைகளையோ, அடுத்தவர்மீதான குற்றச்சாட்டையோ பேசத் துவங்குவார்கள். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியாது. தடுமாற்றத்தினால் நாகுழறும் அல்லது அழுகை பொங்கும் பேச முடியாமல், அழுகை தடுக்கும். இது போன்ற நிகழ்வார் சம்மந்தப்பட்ட அனைவருமோ ஒரு இக்கட்டான சூழலில், மாட்டிக்கொள்ள நேரிடும். உங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடு ஏற்படவும் காரணமாகிவிடும். அதனால், நூறு முறை மனதிற்குள் மறு பரிசீலனை செய்து, நிகழ்வுகளை rewind செய்து பார்த்து, அதன் பாதிப்புகளை மனதிற்குள்ளே அனுபவித்துவிட்டு, விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்லக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணவனும், மனைவுயும் தனித்திருக்கும் போது இருப்பதைவிட பல மடங்கு ஜாக்கிரதை உணர்வு, உறவுகளோடு சேர்ந்திருக்கும்போது அவசியம். உங்கள் துணையின் மேல் ஆயிரம்தான் கோபம் இருந்தாலும் அதை மற்றவர்களின் முன்பு வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் வாழ்க்கையே பறிப்போக் கூடிய அளவிற்கு பெரிய பிரச்சனைகளாயிருந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான தம்பதியர்கள் மற்றவர்கள் முன்னிலையில் தங்கள் துணையைக குறை சொல்வதையே ஒரு பொழுது போக்காக வைத்திருப்பார்கள்.

“எங்க, இவருக்கு ஒரு சின்ன விஷயத்தை உருப்படியா செய்யத் தெரிஞ்சா தானே…?” என்பதிலிருந்து, “இவ செய்யற ரசத்தை பார்க்கக்கூட முடியாது. அப்புறம் எப்படி சாப்பிடறது..?” என்பது வரை விரிப்பார்கள். இது போன்ற சின்ன சின்ன முடிச்சுகள் நூல் கண்டையே சிக்கலாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களது நியாயமான, உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாராட்டுக்களை மற்றவரின் முன்னிலையில் தெரிவியுங்கள். எதறகுமே இடம், பொருள் உண்டு. உணவு உண்பதற்கும், துணையுடன் கூடுவதற்கும் பிரைவஸி எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவத்தை உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் கொடுங்கள்.

மன உணர்வுகளை சரியான வழியில், நாகரீகமான முறையில் வெளிபடுத்தக்கூடிய சக்தி மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதிகபட்சம் நாம் மனிதர்களாக வாழ்ந்தாலே போதும்.. அதையும் தாண்டியெல்லாம் புனிதமாக வேண்டாம்…!

Sunday, January 11, 2015

தமிழரின் அடையாளத்தை இழக்கும் நாம் !!


சமீபத்தில்தான்  இணையதளத்தில்  மதன் கமலிடம்  பேட்டி எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது வடஇந்திய பெயர்களின் மேல் சமீபகாலமாக தமிழர்கள் மோகம் கொண்டு இருப்பதை பற்றி கமல் சில வார்த்தைகள் கூறினார். தன் மகள் ஸ்ருதிக்கு கூட மின்னல் என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

சற்று சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்றே படுகிறது. நல்ல தமிழ் பெயர்களை வைக்க கூச்சப்படுகிறோமா நாம்?(என்னையும்  சேர்த்துதான் ) சற்றே சிந்தித்து பாருங்கள் .நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்த உறவினர் வீட்டிலோ சமீபத்தில் பிறந்த எத்தனை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைத்துள்ளோம?;. கண்டிப்பாக திரிஷா ஷீலா அபினாஷா பமீலா ஹம்சிதா   ராகேஷ்,அஸ்வந்  சஞ்சய்,  என்ற பதில்கள்தான் அதிகமாக வெளிப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிகளிலும் இதே போன்ற பெயர்கள்தான் நிறைய உள்ளன. இதில் எவையுமே தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பதைப் பற்றி தமிழகப் பெற்றோர்கள் பலரும் கவலைப்படுவதில்லை. 

உசிலம்பட்டியிலும் கொண்டலாம்பட்டியிலும் கூட கபீஷ் மற்றும் கூபீஷ்கள் இருப்பது ஒரு வகையில் கலாச்சார அழிவு என்றே சொல்லத் தோன்றுகிறது. கலாச்சார சீர்கேடு அல்ல.கலாச்சார அழிவு.


சமீபத்தில் அறை நண்பர்களுடன் உரையாடல் அப்துல் கலாம் பற்றியது ,முந்நாள் ஜனாதிபதி தமிழனாகி கடைசியில் தமிழை பற்றி உரை  வந்தது ,நண்பர் கேட்டார் தமிழை வளர்க்க 10 வழிகள் சொல்லுங்கன்னு .......அத்துடன் அனைவரும் உரையாடலை முடித்துக்கொண்டோம் ,கேட்டது வேறு மொழி பேசுபவராக இருந்தால் தரும் விளக்கம் அவரையும் தமிழ் கற்க தூண்டியிருக்கும் ......

இதை உடனே கொச்சைப்படுத்தி தமிழ் வெறி என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக நமக்கு நம்முடைய பெயர்களின் மேல் உள்ள கூச்சங்களை மறுபரிசீலனை பண்ண வேண்டியது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்ற வறட்டு வாதங்களை தாண்டி குறைந்தபட்சம் தமிழில் இல்லாத எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்கமாட்டோம் என்றாவது ஒரு முடிவுக்கு வரலாமே?


ஸ,ஷ என்ற வார்த்தை இருந்தால் அந்த பெயர் மாடர்ன் பெயரா?

அல்லது நல்ல தமிழ் பெயர்களுக்கு பஞ்சமா? தமிழ் அழிகிறது என்று வருத்தப்படும் தமிழ் அறிஞர்கள் நல்ல தமிழ் பெயர்களை பண்டைய இலக்கியங்களில் இருந்தோ அல்லது எங்கிருந்தாவதோ தொகுத்து வெளியிட்டால் என்ன? இதை பற்றி மற்ற தமிழர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?
இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. 

ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 
நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 
            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 
            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 
உலகம் போகிற போக்கு சரியில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், தமிழ் மீதும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் அக்கறையுள்ளவர்கள், தன் இனத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பெயர்கூட தமிழில் இல்லை என்ற நிலையை ஏற்கமாட்டார்கள். மக்களின் மன உணர்வுக்கேற்ப தமிழில் புதுமையான பெயர்களை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
தமிழறிஞர்கள்தான் இதனைச் செய்யவேண்டும் என்பதில்லை. தமிழ் மீது அக்கறை கொண்ட யாரும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அழகான - புதுமையான தமிழ்ப் பெயர்களை உருவாக்குவோம். தமிழ்க் குழந்தைகளுக்கு ‘ஃபேஷனான’ தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.
இங்கே சில பெயர்கள்
தூயா, நறுமணா, கவின், கதிர்,




மகிழ், நிலா, மெல்லிதழ், நலன்,
நித்திலா, இன்பா, இதயா.
நீங்களும் இதுபோன்ற பெயர்களை அனுப்பலாமே?
தமிழர் இல்லங்களில் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்ட இணைந்து செயல்படுவோம்.