முக்கிய செய்திகள்

Monday, February 20, 2012

பதின் பருவக்காதல் !!!!!!!!!!

பதின் பருவக் காதல்: பெற்றோர்கள் ஆலோசனை அவசியம்!
அரும்பாக இருந்து மலரும் பருவம் பதின் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலம்தான். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து சேர்கிறது.

மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தற்கொலைக்கும் துணிகின்றனர்

பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

ஒதுக்குவது ஆபத்து

குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.

வெளியே அழைத்துச் செல்லுங்கள்

பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.

ஆபத்தாகும் தனிமை

மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

Wednesday, February 15, 2012

அத்தை /மாமன் பொண்ணுகளை லவ் பண்ணாதிங்க !!!

நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? இன்னும் இல்லையா? ஒகே. அப்படியே யாரையாச்சும் லவ்வுற ஐடியா இருந்தா, உங்க அத்த பொண்ணையோ, மாமன் பொண்ணையோ லவ் பண்ணாதீங்க! ஏன்னா அது ரொம்ப டேஞ்சரு! பலபேரு கஷ்டப்பட்டு, ஆராய்ச்சி பண்ணி, கண்டுபுடிச்சிருக்காங்க!
மேல படியுங்க!

இதுதான் என்னோட முதல் காதல்...!!!!!!

லவ் பண்ணுற எல்லோருமே சொல்ற முதல் பொய் இதுதானே! இத உங்க முறைப் பொண்ணுகிட்ட சொல்ல முடியாது! அவ பதிலுக்கு ' அப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சாந்திய லவ் பண்ணீங்களே ' அப்டீன்னு உங்க ஜாதகத்த எடுத்து விட்ருவா! அப்புறம் உங்க மானம் ப்ளையிங் ஆன் த காத்து!

எங்க பேமிலி ல எல்லாரும் என்மேல ரொம்ப மரியாத வச்சிருக்காங்க!
இப்படி நீங்க மனச்சாட்சியே இல்லாம பொய் சொல்லுறத, வேற பொண்ணுங்க நம்புவாங்க! பட் அத்த பொண்ணு? சான்சே இல்லங்க, அவ நம்ப மாட்டா! அவளுக்குத்தான் தெரியுமே உங்களுக்கு 'எம்புட்டு மருவாதை ' இருக்குன்னு!

எனக்கு பாரின் போறதுக்கு நிறைய  வந்துச்சு! நானும் போனேன் !!!
" அப்புடியா எப்ப வந்துச்சு? இதப்பத்தி அத்தை எதுவுமே எங்கிட்ட சொல்லலியே " னு சடன்லியா ரியாக்சன் குடுப்பா உங்க அத்த பொண்ணு! தேவையா இது!

உனக்குப் புடிக்குமேன்னு இந்த ஷார்ட ஐநூறு ரூபா குடுத்து வாங்கினேன்!
உங்க அண்ணனோட ஷார்ட போட்டுக்கிட்டு, அவ முன்னாடி போயி நின்னு இப்படியெல்லாம் பீலா வுட முடியாது! டக்குன்னு கண்டு புடிச்சுடுவா! அதுமட்டுமில்ல, பிரெண்டோட வாட்சு, செல்போனு, பைக்கு, செயினு இதெல்லாம் கடன் வாங்கிகிட்டு, உங்களோடது னு சொல்லி மத்த பொண்ணுங்கள ஏமாத்தலாம்! உங்க அத்த பொண்ண ஏமாத்த முடியாது!
அவளுகளுக்குத்தான் நம்மளப் பத்தி முழுசா தெரியுமே!

ஆயுசு உள்ளவரைக்கும் உன்னைய பூப் போல தாங்குவேன்!
நம்புவாளா? இல்ல நம்புவாளா? ங்கறேன்! ' மொதல்ல போயி மாமாவுக்கு ஒத்தாசையா வாய்க்கா, வரப்புல வேலையைப் பாருங்க! அவிங்கள மொதல்ல நல்லா கவனியுங்க ' அப்டீன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிட மாட்டா?

நான் சின்ன வயசில ரொம்ப சமத்தா இருப்பேனாம்!
பொம்புளப் புள்ளைங்க மனசுல இடம் புடிக்க எல்லாப் பையன்களும் பொதுவா இப்புடி சொல்லுறதுதான்! ஆனா இதையே உன்னோட அத்தப் பொண்ணுகிட்ட சொன்னா " இல்லையே நீ ஆறுவயசில பக்கத்து வீட்டுல பன்னு களவாண்டு தின்னதா அத்த சொன்னாங்களே " அப்டீன்னு அந்தப் பொண்ணு உண்மையச் சொல்லிடும்! தேவையா இது?

பாத்தீங்களா! நம்ம அத்த பொண்ணுகள லவ் பண்ணுறதில இம்ம்புட்டு ப்ராப்ளம் இருக்குன்னு!
இதுமட்டுமா?

" மூணு நாளைக்கு ஒரு வாட்டிதான் குளிக்கிறீங்களாமே? "

" எதுக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு வரைக்கும் ஊர் சுத்துறீங்க? "

" உங்க செல்போனுக்கு ரீசார்ச் பண்ண, மாமா பாக்கெட் ல இருந்து எதுக்கு பணம் எடுத்தீங்க? "

" அந்த பெட்டிக்கடை மணியம் கிட்ட நானூறு ரூபாக்கு கடன் வாங்கியிருக்கீங்களாமே? எதுக்கு? "

" காலேஜ்ஜுக்கு கட் அடிச்சிட்டு படம் பார்க்க போனீங்களாமே "

இந்த மாதிரி நம்மளப் பத்தி A - Z கலெக்ட் பண்ணி வச்சிட்டு, நம்மள கொன்னுடுவாய்ங்க! இப்ப சொல்லுங்க அத்த பொண்ணுங்கள லவ் பண்ணலாமா? அவளுங்ககிட்ட நம்ம பருப்பு வேகுமா? நமக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காத்துல பறந்துடாது?
லவ்வுன்னாலே ஒரு கிக்கு இருக்கணும்! கொஞ்சம் பொய், கொஞ்சம் பீலா இதெல்லாம் இருந்தா தான் லவ் இனிக்கும்!!!!!!!!

மரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு FACE BOOK ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

Tuesday, February 14, 2012

எண்ணமே முகவரி.....

எண்ணமே முகவரி.....

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன" 

எண்ணம் போல் தான் வாழ்க்கையா... இது உண்மை தானா. "எல்லாமே அவங்க அவங்க எண்ணம் போல் தான் அமையும்" என்று சாமானியர்களும் சொல்ல கேட்கிறோம். "நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் " என்கிறது வேதம். உண்மை என்ன.
நல்லது செய்பவனின், நினைப்பவனின் வாழ்க்கை, நல்ல விதமாகவே அமையப் பெறும். நாம் "உண்மையிலேயே" நல்ல எண்ணம் கொண்டவராக இருத்தல் வேண்டும். "நல்ல எண்ணம் கொண்டவர்" மாதிரி இருக்கக் கூடாது. பிறகு தீதுக்கும், அதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. கெட்ட எண்ணம் கொண்டவனின் வாழ்க்கை - அடிதடி, கைகலப்பு என்கிற ரீதியில் தான் ஓடும் அல்லது வேறு வழியில் நிம்மதியற்ற விதமாக அமையும.

"நீங்க சொலறத எல்லாம் ஏத்துக்கவே முடியாது. மோச நாசம் பண்றவன் தான் நல்லா இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சி, சாமிக்கு பயந்து வாழுறவன் எங்க நல்லா இருக்கான்" என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். விதிவிலக்காக, சொற்பமான பேர்களுக்கு அம்மாதிரியான வாழ்க்கை அமைய பெறுவதை தவிர்க்க இயலாது. அதே சமயம், இங்கே ஒருவன் நன்றாக
இருக்கிறான் என்பதை, எதை வைத்து தீர்மானிக்கிறோம். அவன் பணக்காரன் என்று சொல்லப்படுவதை வைத்து தான் தீர்மானிக்கிறோம்.

அப்படி பார்ப்பதை விட. நாம் "மன நிம்மதியாய், தன்னை சுற்றி உள்ளவர்களால் தொந்தரவற்ற நிலை அமைய பெற்று, நோயற்ற வாழ்க்கை அமையப் பெற்று இருப்பவனையே மகிழ்ச்சிகுரியவனாய் " நாம் பார்க்கிறோம்.சொல்கிறோம். சொந்த வீடு உள்ளது- ஆனால் இருபது
வருஷத்திற்கு லோன் கட்ட வேண்டும். கார் வைத்திருக்கிறார். அதற்கு ஐந்து
வருஷம் பணம் கட்ட வேண்டும். பார்க்கின்ற ஆடம்பர பொருட்களை எல்லாம்
வாங்குகிறார். கடன் அட்டை வைத்துள்ளார். அவரோடு நம் வாழ்வை ஒப்பிட்டு
பார்த்து, "அய்யோ அவர் சந்தோஷமாய் தான் இருக்கார்" என்று சொன்னால்,
அந்த சந்தோஷத்தை யார் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம். கடனை அடைக்கக்கூடிய சாமர்த்தியம் உள்ளவன் பிழைப்பான். மற்றவன் முழிப்பான். விலை கொடுத்து வாங்கிய பொருள எத்தனை நாளைக்கு உங்களுக்கு சொந்தமானதாய்
இருக்கக்கூடும்.

எனது நண்பர்கள் சிலர், தங்க நகை தயாரிப்பு துறையில் இருக்கிறார்கள்.
எனது நண்பரின் முதலாளி மிக பெரிய பணக்காரர். அவரிடம் நிறைய பேர் பணி
புரிந்தார்கள். அவரிடம் பணிபுரிபவர்களில், யாரேனும் தனியாக தொழில் தொடங்க முன் வந்தால்- என்ன செய்வார் தெரியுமா? " பட்டறைல இருந்த நூறு கிராம் தங்கத்தை திருடி விட்டாய்" என்று வெளியேறி போக நினைக்கும் தன் பணியாளர் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து, அவனை வெளியேற விடாமல் தன் பணியாளாகவே வைத்திருக்க முயற்சிப்பார்.
இம்மாதிரியான எண்ணம் கொண்ட முதலாளிகள் நிறைய பேர், அத்துறையில் முன்பு இருந்தார்கள். தைரியசாலிகள், "உன்னால முடிஞ்சதை பாருய்யா" என்று வெளியேறுவார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள், அங்கேயே அடைபடுவார்கள். அன்றைக்கு, பல வருஷங்கள் முன்னால்-

அப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணி, கெட்ட எண்ணத்துடன் அடுத்தவரின்
வளர்ச்சியை தடுத்தவர்- இன்று சாப்பாட்டுக்கே கஷ்ட படுகிறார்.
இங்கே மூன்று விதமான எண்ணங்களையும், அதன் காரணமாக அமைந்த மூன்று விதமான வாழ்க்கையையும் பார்க்கலாம்.தைரியமான மனமும், எண்ணமும் கொண்டவன், தனக்கான சூழ்ச்சிகளை புறம் தள்ளி விட்டு வெளியே வந்து ஜெயிக்கிறான். அவன் எண்ணமே
அவன் வாழ்க்கையாகிறது. பயந்த சுபாவம் உள்ளவன், தன் பயத்தின் காரணமாகவே தான் நினைத்ததை அடைய முடியாமல் போகிறான். அவனது பய எண்ணமே, அவனது வாழ்க்கையாகிறது.

கெடுவான், கேடுநினைப்பான் என்கிற சொற்றொடருக்கேற்ப்ப,
அந்த முதலாளியின் கெட்ட எண்ணமே, அவரின் வாழ்க்கையாகி அவரின் குடி
கெடுத்தது. அவர் பிறரை தான் அழிக்க நினைத்தார். கடைசியில் அவரே
அப்படியானார். சபலப்படும் எண்ணமே, பலரின் வாழ்க்கை சீரழிய காரணமாகிறது.
நாம் சற்றே ஒதுங்கி நின்று-வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த... நன்றாக
வாழ்கிற, நன்றாக வாழாத என்று அனைவரின் வாழ்க்கையையும் உற்று நோக்கினால், அவரவர் எண்ணங்களே, அவரவர் வாழ்க்கையானதை காணலாம்.
அவ்வளவு ஏன். உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள். உங்களின் ஒவ்வொரு பெருமைபடக்கூடிய வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் - உங்களது எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது என்பதை அறிவீர்கள் தானே.

Monday, February 13, 2012

காதலர் தினம் !!!!!

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் நாள் குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், குறுவட்டுகள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் வணிகம் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோசாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

6. வாழ்த்து அட்டை பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். மின்னஞ்சல், குறுஞ்செய்தி,மின் -அட்டை, இணையம் என உயர் தொழில் நுட்பம் வாசமடிக்கும் டிஜிடல்/எண்ணிம உலகம் இது. ஆனாலும் எந்த தொழில்நுட்பத்தாலும்வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் சிறப்பு தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

18. பிப்பிரவரி 14ல் என்ன சிறப்புஎன்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின சந்தை அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஒழுங்கு செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு அமைதியாகத் திரும்பி விடுவதும் உண்டு.

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

22. வாழத்துஅட்டை இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

23. கைபேசியில் தனது காதலை காணொளியாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ கைபேசியிலேயே அனுப்பி விடுவது பிந்திய காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.

38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !




முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)

முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)

இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.


இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான். http://ta.wikipedia.org/wiki/சோழர்


நன்றியுடன்

                         உங்கள்  சிவகுமார் ..............