முக்கிய செய்திகள்

Thursday, March 15, 2012

அன்புடன் நேர்மையிருந்தால் அழகாய் வாழலாம்

அன்புடன் நேர்மையிருந்தால் அழகாய் வாழலாம் 
அன்பால்தான் அழகான வீட்டை உருவாக்க முடியும். குடும்ப உறவுகளிடையே நம்பிக்கையும், நேர்மையும் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் உருவானாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் சிக்கல்களை சுவடு தெரியாமல் செய்துவிடலாம் என்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். இல்லறத்தில் தம்பதியரிடையே மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். கவனமாக கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாகும்.

அன்பாயிருங்கள்

அன்புதான் தம்பதியரிடையே வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணரவேண்டும்.

அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவேண்டும்.

நேர்மையே முதுகெலும்பு

நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு. நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். ''என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்'' என்று இருவரும் எண்ண வேண்டும்.

பரஸ்பர நம்பிக்கை

வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதுதான் புத்திசாலித்தனம்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

முரண்பாடு வேண்டாம்

ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.

இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர்தான்.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
 

No comments:

Post a Comment