முக்கிய செய்திகள்

Sunday, August 26, 2012

சாபமா, வரமா துபாய் -இறுதி பாகம்


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
  9. பாகம் -9   http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html
  10. பாகம் -10   http://thanjavursiva.blogspot.com/2012/07/10.html
  11. பாகம் -11   http://thanjavursiva.blogspot.com/2012/08/11.html
  12. பாகம் -12  http://thanjavursiva.blogspot.com/2012/08/12.html
  13. பாகம் -13  http://thanjavursiva.blogspot.com/2012/08/13.html


தகவல்களாய் துபாய் பற்றியும் வளைகுடா பற்றியும் விலாவாரியா பாத்தோம்.

வெறும் 150 வருடங்களை வரலாறை கொண்ட இந்த சிறிய ஊர்.

சில தகவல்களின் அடிப்படையில் 1200 பிரஜைகளை 1822 ஆம் வருடத்தில் கொண்டிருந்தது எனும் போது சின்ன ஊர் எனச் சொல்வது எவ்வளவு உண்மையாகிறது. ஆனால் இன்று உலகின் 20 வது விலை உயர்ந்த நகரம் என பட்டியலிடும் போது, உலகின் மூன்றாவது விமான நிலையம் உள்ளது எனும் போது அதன் வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.

இந்த தொடர் 13 பகுதிகளாக வந்து தங்கள் பேராதரவை பெற்றதும் நன்றியோடு என்  வணக்கத்தை பதிவு செய்கிறேன் . தங்களின் ஊக்கமும் தூண்டுதலுமே இந்த தொடரின் வெற்றி.

இதோ அரபு மண்ணின் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த கஷ்ட நஷ்டங்கள் புரிந்து, ஒரு வளமான வாழ்வுக்காக நான் தயார் என நீங்கள் முடிவெடுத்தால். சபாஷ். வாருஙகள். வளைகுடா உங்களுக்காக காத்திருக்கிறது, உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும். ஒளிமயமான வாழ்வின் சேமிப்பிற்கு நிச்சயம் உதவும்.

வேலை தேடுதல் கடினம் அல்ல. நல்ல ஏஜெண்ட், நல்ல கம்பெனிகள் என பல உண்டு. உஷார், ஏமாற்றும் கூட்டமும் உண்டு.

வேலை கொடுக்கிற நிறுவனம் நமக்கு தரும் சம்பளத்தையும் சலுகையையும் நல்லதா தானே சொல்லும். இல்லாம, உங்க தகுதிக்கு நாங்க ரொம்ப குறையாத்தான் கொடுக்கிறோம் என்றா உண்மையை சொல்லுவார்கள்.

இதுதான் சம்பளம், இது தான் சலுகைகள் என கேட்கும் போது, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரித்தான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் தான் அதே ஊரில் இருக்கும் நமது நண்பரிடத்தில் சொல்லும் போது அவர் சொல்லுவார்.

தங்க இவ்வளவு, சாப்பிட இவ்வளவு, இந்த சம்பளம் போதுமா போதாதா எனும் போதனை எல்லாம் அவர் தான் சொல்ல வேண்டும். என்ன சில சமயம் ஆர்வ கோளாறினால் நண்பர் கொஞ்சம் அதிகம் பேசலாம். பொறுமையாய் சகித்துக் கொண்டால், கை மேல் பலன் உண்டு.

சரி, பணம் சம்பாதிக்கிறதுண்ணு முடிவு செஞ்சாச்சு, துபாய் பத்தியும் தெரிஞ்சாச்சு, நல்ல வேலையும் தேடியாச்சு. அப்புறம் என்ன என படிப்படியாய் நாம் சிந்திக்கும் போது, ஒரு முக்கியமான விசயம். இது தான் வெற்றியின் ரகசியம்.

அது என்ன !!!

இது சுலபம் இல்லை. சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். தீபாவளி சேல்ஸ்ல தள்ளுபடில வாங்கி மலை இல்ல மடுகுதான்னாலும் ஓகே. 

புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.

இது இல்லன்னா, இத புரியலேன்னா ‘எங்க ஆத்துக்கார்ரும் கச்சேரிக்கு போறார்ங்க’ கதையா நானும் போயி கொட்டிக் கிடக்கிற காச அள்ளிட்டு வந்திடரேன்னு நினைச்சா கஷ்டம் ஆயிடுங்க.

சரி வந்து இறங்கினாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இன்னொரு விசயம் உண்டு.

வெளி நாடு வந்து இறங்கியதும் சில அடிப்படைகளை உணர்ந்தால் நல்லது என தோணுது. என்ன தான் இருந்தாலும் இது நம்ம ஊர் இல்ல. இந்த ஊர் சட்ட திட்டம், நடைமுறை, தட்ப வெப்பம், சுற்று சூழல் எல்லாம் பார்த்து நாம கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறது அவசியம். 

நாம எதுக்கு வந்திருக்கிறோம், காசு சேக்க*றதுக்கு. அந்த நெனைப்ப விட்டு விடாம, கெட்டியா பிடிச்சுக்கணும்னு சொல்லலாம். அனாவசிய செலவை குறைக்கலாம். அடுத்தவனுக்காக வாழாம நமக்காக வாழலாம். அது என்ன அவனுக்காக, அடுத்தவனுக்காகன்னு கேட்டீங்கன்னா.

ராசா மாதிரி மெத்து மெத்துன்னு உக்கார்ரதுக்கு சோபா இங்க கிடைக்கும். வாங்கி போட்டா எவ்வளவு நாள் நாம இதுல உக்காருவோன்னு தெரியாது. ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது. வேலை இல்ல போடான்னு கம்பெனிக்காரன் சொன்னா, சொன்ன 30 நாள்ல நம்ம வெளிய போகணும். இதென்ன நம்ம ஊரா, இங்க இருக்கணும்னா விசா என்கிற ஒரு விஷயம் வேணும்.

அதனால எந்த செலவு செய்தாலும் யோசிச்சு சரின்னு பட்ட பின்னால செய்யுறது நல்லதுன்னு தோணுது.


இந்தியாவில் பெரிய தொகை கட்டி அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இவர்களில் பலர் நம் நாட்டில் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை விட குறைவாகவே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பது வேதனையான
செய்தி...!

முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல'' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்துள்ளது. அது போல, இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும். இனிமேலாவது மத்திய அரசு அரபு நாட்டு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இதை அரபுநாட்டில் உயர் பதவி வகிக்கும் நம் இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநலப்போக்கு இல்லாமல் நம் சகோதரர்களின் துன்பங்களைக் களைவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...!

இந்தக் கருத்தை நீங்களும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...


(முற்றும்..... கனத்த மனதுடன்....)