முக்கிய செய்திகள்

Saturday, July 26, 2014

பொருள்வையில் பிரிதல் தலைவனின் இயல்பு !!!!


''வியாழனில் 4,331 நாட்கள் ஒரு வருடம், செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம், பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம், வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம், புதனில் 88 நாட்கள் ஒரு வருடம், என் அருமை மகளே... நீ விடுப்பில் வருவது பதினைந்து   நாட்கள். அதுதான் எனக்கு ஒரு வருடம்'' 


காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத் துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான்.

சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது...
இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை.

என்னதான் மகன்கள் இருந்தாலும், ஒரு தந்தைக்கு தன் மகள்தான் பிரியமானவளாக இருக்கிறாள். ''நான் பிறந்தபோது அம்மா பூரிப்படைந்தாள். அப்பா நீயோ அடுத்த நொடியில் இருந்து உனக்கான வாழ்வை விட்டுவிட்டு, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாய்'' அதுதானே உண்மை

என் பொண்ணுக்கு அதுதான் பிடிக்கும் என்று, பிடித்தப் பொருளை வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது தந்தையின் கடமை. அதற்குப் பிறகு, எல்லாவற்றுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யத் தொடங்குகிறார் தந்தை.


''அவனுக்கு ரெண்டு பொண்ணுப்பா'' என்று உறவுகளும் நட்பும் சொல்லும்போதே அது எவ்வளவு பெரிய பொறுப்பை தந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. பல இடங்களில் பெண் பெற்றவர் என்பது முன்னுரிமைக்கு வழிசெய்கிறது. காரணம் மகள் என்பவள் பாசத்துக்குரியவள்; மகள் என்பவள் குடும்பத்தின் பாதுகாவலி; மகள்தான் குடும்பத்தின் கௌவரம். இதுதான் உலகெங்கும் உள்ள பாசவலை

''அப்பா, என்னை மலை தாண்டியுள்ள ஊரில் கட்டிக் கொடுக்க வேண்டாம். கடல் தாண்டிய ஊரில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். பாதையில்லா ஊரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டாம். நான் நினைத்தால் காலையில் கிளம்பி உன்னை வந்து பார்த்துவிட்டு மாலையில் புகுந்த வீடு திரும்பும்படியான தூரத்தில் மாப்பிள்ளை பார்'' என்று கவிதையாய் சொல்கிறாள் ஒரு மகள். அதுதான் மகளின் தந்தைப் பாசத்துக்கு இலக்கணம்.

தாய் இறந்து போய்விட்ட குடும்பங்களில் உள்ள மகள்தான் அதற்குப் பிறகு அனைவருக்கும் தாயாகிறாள். திருமணத்தை நினைத்துக்கூட பார்க்காமல் தன் தந்தைக்கும் தம்பி தங்கைகளுக்கு தாயாகி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மகளுக்குப் பொருத்தமானவன் என்று தந்தை ஊர் ஊராக சல்லடை போட்டு சலித்து மாப்பிள்ளைத் தேடி நிச்சயம் செய்வதும், திருமணத்துக்கு முன்பே அந்த மாப்பிள்ளையைப் பார்த்து என் சம்பளத்தில் பாதியை தந்தைக்கு அனுப்புவேன் அதற்கு சம்மதமா என்று அந்த மகள் இரைஞ்சுவதும் எத்தனை பெரிய பாச வலை. இந்த உணர்ச்சியும் நேசமும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே மட்டும் நிலவும் பிரத்யேக உலகம். 



சிறு வயதிலேயே மகளுக்கான முக்கியத்துவம் தந்தையிடம் ஆரம்பித்துவிடுகிறது. இருப்பதில் அழகான ஆடை, உயர்வான அணிகலன், சிறப்பான கல்வி என்று தேடித் தேடி சேர்க்க ஆரம்பிக்கிறார் தந்தை. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குண்டுமணி குண்டுமணியாக தங்கத்தையும் வாங்கி சேர்க்கிறார். கணவன் வீட்டில் மகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக அத்தனை வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்கி கொடுக்கிறார். மகளின் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது செய்கிறார். அவர்களைத் தோளில் தூக்கி கொஞ்சி அதில் சுகம் காண்கிறார். இப்படி எத்தனையோ அவதாரம் எடுத்து மகளிடம் அன்பு வளர்க்கிறார்.

அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன் என்கிறது கண்ணதாசனின் பாடல் வரிகள். அப்படி தன் மகளுக்கு மகனாகும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறார் ஒவ்வொரு தந்தையும். நம் பண்டைத் தமிழ் மன்னர்கள் மகளை அண்டை தேசத்துடனான உறவுக்கு பாலமாக நினைத்தனர். எதிரி மன்னனை தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து நட்பு நாடாக ஆக்கிக்கொண்ட ராஜ தந்திரிகளாக விளங்கினர். இன்று ஒரு குடும்பத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த மகள், அன்று ஒரு தேசத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறாள்.

என்னதான் கணவன் வீட்டில் ராஜபோகமாக வாழ்ந்தாலும், தன் தந்தையின் நினைவும் பிறந்த வீட்டின் பற்றும் இல்லாத பெண்கள் உண்டா. தாய் வீட்டுக்கு போய்வரும் நாளைத்தான் அவள் வாழ்நாள் முழுவதும் நினைத்து அசைபோடுகிறாள். தந்தை மேலுள்ள ஈர்ப்புதான் அவளை கணவனிடம் தந்தையைத் தேடவைக்கிறது. பொதுவாகவே தாயிடம் மகனும் தந்தையிடம் மகளும் பாசமாக இருப்பார்கள் என்கிறது உளவியல். அதற்குப் பாலின ஈர்ப்புதான் காரணம் என்றும் விளக்கம் சொல்கிறது. ஆனால், அதையும் தாண்டி தகப்பன் மீது மகள் வைக்கும் பாசமும் மகள் மீது தந்தை வளர்க்கும் பாசமும் எந்த உளவியல் கோட்பாடுகளிலும் அடங்காது. அங்கே காரண காரியங்களைத் தாண்டிய அன்பும் பாசமும் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

1 comment: