முக்கிய செய்திகள்

Sunday, June 10, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -2

பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html?spref=fb


பாகம் -2

ஃபாரின் காசால் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் உயர்த்திய சில வெற்றியின் கதைகள் உண்டு, அதே போல, ஃபாரின் வந்தும் நிறைவேறாத கனவுக்கதைகளும், வராமலேயே அந்த முயற்சியில் தோற்று போன கண்ணீர் கதைகளும் உண்டு.

சரித்திரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் பெயர் போன நம் இந்திய தேசத்தில் குடும்ப பொறுப்புக்களும் பாரங்களையும் தன் கடமை என எண்ணி, மகிழ்வாய் பொறுப்பாய் வாழும் எத்தனை எத்தனையோ நெஞ்சங்களின் உண்மையன்பு நமக்கு தெரியும் தானே.


அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-jumeirah-beach-hotel.jpg

கட்டிக் கொடுத்து கரையேத்த இரண்டு பெண்கள், குடும்பத்துல சம்பாத்தியம்ங்கிறது நான் தான் ….. எனக்கும் சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. இனி என்ன செய்யலாம் என்று நினைத்த போது, திகைப்பானது… வாழ்வே கேள்வி குறி ஆனது. ஆனாலும் இந்த கஷ்டம் ஊருக்கும் உறவுக்கும் பேசும் செய்தியானது. ஊரும் உறவும் இது குறித்து உற்சாகமாக அல்லவா பேசுகிறது. சமுகத்தின் கேலிப் பேச்சு சிலது, இதயத்தை துளைக்கும். ஆழமாய் சென்று ஆற முடியாத ரணங்கள் ஏற்படுத்தும்

அப்போது தான், அக்கம் பக்கத்து வீட்டு அனுபவம், அன்னிய தேச சம்பாத்தியம் பற்றி கேட்ட கதை தீர்வு போலே தோன்றும். எங்க பையன் துபாய்ல வேலை செய்யறான், மாசத்துக்கு இத்தனை பணம் அனுப்புறான் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள்.

அப்படியா !!! அவ்வளவு வருமானம் வருமா… பரவாயில்லையே என வாழ்வு சிறிது நம்பிக்கை தரும்.

சரி எப்படி போவது. எவ்வளவு பணம் வேண்டும், என திக்கு தெரியாமல்.... அங்கும், இங்கும், இங்கும், அங்கும் சுற்றி ஒரு வழியாக ஒரு பயணத் தரகர் அறிமுகம் கிடைத்துவிடும். அவரை சந்திக்க, அவரின் அலுவலகத்தின் உள்ளே போகும்போதே, ஆஹா… ஏதோ சொர்க்கத்தின் கதவுகளையே திறந்து கொண்டு போவது இருக்கும்.

ஆச்சரியம், பிரமிப்பு அகலாமலேயே அவரின் அலுவலகத்தில் கால் குழையும்...... கனவுகளை விற்பனை செய்யும் அந்த ஆபிஸ் அறையில் அவரது குளுகுளு அறையும்,சுவரில் உள்ள ஆகாய விமான படமும், தலை சுற்றி ஏதோ ஒரு புதிய உலகுக்கு இழுத்து செல்லும்.

அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … ஃபாரின் மேன் பவர் ஆபிஸ் என்றாலே அதற்கென சில அடையாளங்கள்… வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள். நம்பிக்கை முகத்தில் ஒளிர் விட உலகையே வென்ற தோரணையில் அங்கே அமர்ந்திருக்கும் பயணம் செய்ய காத்திருக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் நிச்சயம் ஒரு ப்ரஹஸ்பதி இருப்பார். அவர் முன்னமே இது போல் பல நாடுகள் சுற்றிய உலகம் சுற்றும் வாலிபர்.

அவரையும் அவர் பேச்சையும் கேட்க ஒரு கூட்டமே அவரருகில் நிற்கும். அவரும் சளைக்காமல் 24 மணி நேர செய்தி சேனல் மாதிரி ஒரே செய்தியை பலருக்கும் பட்டுவாடா செய்வார். அவர் அளந்து விட்ட கதைகள் நாம் முந்தைய பாகத்தில் விவாதித்தது. எது... ????? பெட்ரோலும், பிரியாணியும்.

அவர் அளந்து விடும் கதைகளில் மிகப் பெரிய சுவாரசியம் இருக்கும். இடையிடையே புரியாத பாஷயில் பேசுவார். விசா, இக்காமா என்று புதிய வார்த்தைகள் சொல்லி மசாலா தடவி… போட்டு தாளிப்பார். விசா இல்லேண்ணா, அந்த நாட்டுல வாழ முடியாது. உசிருக்கு எப்படி மூச்சுக்காத்தோ, அதே மாதிரி ஒரு நாட்டுல தங்குறதுக்கு விசா… இப்ப புரியுதா… என தத்துவ ரீதியில் அடித்து விடுவார். 

நாடுகளை பற்றியும், நடப்புகளை பற்றியும் விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வேறு வேறு நாட்டின் பல காசுகளை (நோட்டையும் தான்) எடுத்து காண்பிப்பார். இந்த ரூபாய் ஒண்ணு குடுத்தா, நம்ம ஊர்ல, 10 ரூபாய், இதோ இருக்கே, இத குடுத்தா, நம்ம ஊர்ல, 130-140 ரூபாய் என்று .......... விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வெளி நாட்டு கரன்ஸியை …,.ம்… பாருங்க… தொட்டு பாருங்க என நம்மிடம் கொடுப்பார். அந்த காகிதத்தை வாங்கியதும் ஏதோ ஒரு உணர்ச்சி, புல்லரித்து சந்தோசம் பொங்கும்.

அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-dubai-desert.jpg

சரேலென, சட்டை பையில் கை விட்டு, ஃபாரீன் சிகரெட் எடுப்பார். ஸ்டைலாய் பத்த வைத்து, நமக்கும் தானம் செய்வார். நீளமாய் வெள்ளையாய் ஒரு ஸ்டைலாய் இருக்கும். தீ பற்ற வைக்க ஒரு லைட்டர் வைத்திருப்பார். ஸ்டைலாக ஒரு சர்க்கு சர்க்கி… தீயில் பற்ற வைத்து குப்குப்பு என சிக்கு புக்கு ரயில் வண்டி ஓட்டுவார்.

ஊரில் செய்யது பீடி குடித்தவர் சொல்லுவார், ம்… இப்போல்லாம், "ஃபாரீன் சிகரெட் தான் ஒத்துக்குது. இல்லேன்னா, தொண்டை பிடிச்சிகுது". அவர் கொடுத்த சிகரெட்டை புகைத்து கொண்டே, கனவுகளோடே இவன் சிகரெட் பிடிப்பான். துளைத்து துளைத்து கேள்விகள் கேட்பான். அவர் சட்டை பையில் திருப்பி வைத்த, அந்த நோட்டுக்களையே பார்த்து கொண்டிருப்பான். அவன் மனதில் தோணும் .....நாமும் இதுபோல் நிறைய சம்பாதிக்கணும் ......... ஃபாரீன் சிகரெட் வாங்கி புகையை ஸ்டைலா வெளியே ஊதித்தள்ளணும்.....

உள்ளே சென்றால் ஏஜெண்ட், அவர் வெளியில் பார்த்த ஃபாரீன் ரிட்டர்ன்னுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. நம்பிக்கையையும் கனவையும் டன் டன்னாக டண்டணக்கா டணக்குடண்ணா என கூவி கூவி விற்பார்.
முக்காலே மூணு வீசம் தொலைபேசியிலே பேசுவார். நமக்கு சொல்ல விரும்பும் சேதிகளை அவர் போனில் பேசுவார். (இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்). ஆனாலும், ஒட்டு கேட்டது உண்மை என்று, அப்புராணியாய் நம்பியும் விடுவோம்.

நாம் அவரை உன்னிப்பாக கவனிக்கிறோமா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, தாறுமாறாக, என்ன என்னவோ பேசுவார். "நாளைக்கு ஐம்பது பேர் சவுதி போயி ஆகணும், .... என்னது, விசா கிடைக்காதா, ஹலோ, கிடைக்கலேன்னா, சவுதி ராஜா கிட்ட சொல்லு, கொல்லிமலை சோலமலை சார் கண்டிசனா சொல்லிட்டாருன்னு... ஆமா .... நாளைக்கே வந்தாகணும் ....... ஊர்ல எல்லாரையும் நாளைக்கே வர சொல்லிட்டோம்ல .....நமக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு." அது என்னிக்கும் மாறாது....


ஃபோனை வைத்து விட்டு நம்மிடம் சொல்வார்… கவர்மெண்டுல நமக்கு நல்ல செல்வாக்கு. இப்ப பாருங்களேன், நான் பேசுனது இமிக்ரேஷன் ஆபிஸ் டைரக்டர் கிட்ட…!!!! அப்படியா என அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அந்த ஊருக்காரருக்கு தமிழ் தெரியுமா, இல்ல கொல்லிமலை சோலமலை எல்லாம் விளங்குமா என கேள்வி கேட்காமலேயே இருப்போம்.

அவர் பேச்சு இன்னும் தேன் தடவியது போலே இருக்கும். தம்பி, இப்போ நீங்க குடுக்கற இந்த பணம், செலவு இல்ல, முதலீடு என்று. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், பயணம் நிச்சயம். ஊருக்கு போன 8-10 மாசத்துலயே அங்க லட்ச ரூபாய் சம்பாதிச்சுடலாம். நாளைக்கே பணத்தோடு வந்துடுங்க...... 
அப்புறம் சீரியசாய் பைல் எல்லாம் உருட்டு… ஏதோ ஒரு பேப்பரை உருட்டி விட்டு சொல்வார். பரவாயில்லையே நீ அதிர்ஷ்ட சாலிதாம்பா. வர்ற சனவரில அடுத்த பேச்சுல (batch) அனுப்பிடறேன், நீ காச மட்டும் டைமுக்கு வந்து கட்டிடு..

அப்புறம் என்ன, பளபளப்பாய் உடை அணியலாம், பாரின் செண்ட் போடலாம். விதம் விதமாய் உண்ணலாம். சமுதாய மதிப்பு பெருகும். வீட்டின் கடன்களும், கடமைகளும் ஒரு ஐந்து வருடத்தில் முடித்து விடலாம். இதை விட வேறு என்ன வேண்டும். லேசாக கண்ணை மூடினால், புகையுடன் கூடிய கனவுதான்...........

இது போக, ஒரு 1-2 வருசத்துல, ஊருக்கு திரும்பி வந்தீன்னா, ஊர்க்கார பய அம்புட்டு பேரும், தன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு வரிசைல வந்து நிப்பானுவ. கனவுகளை விற்றுக் கொண்டே, கல்யாண பேச்சை கொணர்ந்து, பையனை வளைத்து விடுவார். பையனின் முகமும் 100 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகும். இதையும் கவனித்து உபரியாய் இன்னும் கூட சொல்வார்… தம்பி, எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒண்ணு இருக்குது… இப்போவே கல்யாண களை வந்துடிச்சி பாருங்களேன்… எனவும் சொல்லுவார்.

அதே மப்பில் திரும்பி வந்து, கடனை, உடனை வாங்கி, காடு கரையை வித்து, எப்படியோ பணம் தேத்தி, பாழாய் போன ஏஜெண்டிடம் தந்து… பின்னர் வெந்து நொந்து ஏமாந்தவர் என நிறைய பேர். ஏமாற்றத்தில் துவண்டு வாழ்க்கையையே தொலைத்தவரும் உணடு. ஏமாற்றப்பட்டது கூட மறைந்து விடும்… சில ஏச்சுக்கள் மட்டும் அப்படியே மனதில் நிற்கும்…. 'எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் பாரின் போற மூஞ்சியா' என்ற பொறாமையின் உச்சகட்ட வசவுகளையும் கேட்டு …. உண்மை என வாடிய மலர்கள் பல.

இதை விட கொடுமை. பயணம் எல்லாம் ஏற்பாடு ஆகி வீட்டில் எல்லாம் பிரியாவிடை பெற்று ஜம்மென்று கிளம்பி விடுவார். "இன்னைக்கு சென்னை பம்பாய் ப்ளைட், நாளை மறுநாள் பம்பாய்ல இருந்து நேர பாரின்". சில சமயம் நடப்பது என்னவோ பம்பாய் சென்று மாத கணக்கில் காத்திருக்கும் கொடுமை உண்டு. அங்கேயும் பெரிய கும்பல் இருக்கும். 
நம்மைப்போல ஒரு குரூப்பு ஏற்கனவே அங்கிருக்கும். நிறைய நம்மை போலவே ஆட்கள் உண்டு. விசா ஒன்றிற்காக வாழும் ஒரு கூட்டம், பயணத்தின் ஒரு கட்டம். காலை விடிந்தால் இன்று விசா வரவேண்டும் என்று பிரார்த்தனைகள்.

போயிட்டு வாரேன் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு செல்லும் பக்கத்து அறை தோழன் கண்ணில் நிறைவான். சரி… இவன் இன்று!!! நான் என்று …!!!!என்ற ஏக்கம். இந்த நிச்சயமிலாத நரகத்தில், சில காலம் வாழ்ந்த நிகழ்வுகளும் உண்டு. எப்படியோ ஒரு வழியாக விசா வந்துவிடுகிறது. வாங்கிய விசாவுடன் துபாய் செல்லும் அந்த ப்ளைட்டில் நாமும் செல்வோமா… வாருங்கள் டிக்கெட் எடுக்காமல்… விசா வாங்காமல் அவனோடு சென்று துபாய் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்….


(தொடரும்.........)

Saturday, June 9, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -1

இக்கட்டுரை அயல்நாடுகளில் வசிப்போரும், அயல் நாடுகளில் தத்தம் குடும்பத்தாரை பிரிந்து வாழ்ந்து வருவோரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.. பணம் சம்பாதிப்பது என்ற அத்தியாவசிய தேவை எதையெல்லாம் இழக்க வைக்கிறது என்பதை பற்றிய ஒரு பதிவு..  துபாயை பற்றி சொல்லாத விஷயங்களே இல்லையெனும் அளவிற்கு இக்கட்டுரையை படித்தால் துபாயினை பற்றிய நம் மாய எண்ணங்கள் விலகும்.. சமிபத்தில் படித்த ஒரு நல்ல கட்டுரை எனலாம். படிக்கையில் பல இடங்களில் மனம் கனத்தது.


                    அயல்நாட்டு மோகம் என்பது நமக்கு விதிக்கப்பட்ட சாபமா, வரமா என்று இன்று வரை நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இன்னும் நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.. பிழைப்புக்காக நம்மவர்கள் பல நாடுகளுக்கும் செல்வதும் இன்று எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் வேளையில் நம்மிடம் அதிக எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் துபாயின் பகட்டையும், இருட்டையும் நகைச்சுவையுடன் ஒரு கட்டுரையாய் தந்திருக்கிறார்கள், 

துபாய்.

இது என்ன ஒரு ஊரின் பெயரா, இல்லை ஒரு நாட்டின் பெயரா. ஒரு வட்டாரத்தின் பெயரா என்ற தெளிவு இல்லாது, பெயர் சொன்னதுமே மனதில் மரியாதை. கொப்பளிக்கும் மகிழ்ச்சி. ஒரு சொர்க்க புரி கண்ணில் விரியும்.


ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு ஊர் தான் துபாய் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு, குவைத், சவுதி என்ற மத்திய கிழக்கு நாடுகள் எல்லாமே கூட துபாய் தான்.


சரி, இது என்ன புது பெயர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

அபுதாபி (தலைநகரம்) துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா (நம்மூர் மட்டன் கைமா அல்ல), புஜைரா, அல் அய்ன் என்று நம் தமிழ் வாயில் நுழையாத அரபி பெயர்களை கொண்ட 7 குட்டி ஊர்கள் சேர்ந்த நாடே அமீரகம் என்றும் அழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.


இந்திய தேசத்திற்கு மட்டும் அல்லாது வெள்ளைக்காரனுக்கும் இந்த ஊர் பிடிக்கும். இந்த ஊரை பற்றி மரியாதையான ஒரு எண்ணம் உண்டு. வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன்.


நம் தங்க தமிழ்நாட்டிலே "துபாய்" என்ற பெயருக்கும், இங்கிருந்து வாங்கிப்போகும் தங்கத்திற்கும் கொஞ்சம் (ரொம்பவே) மவுசு உண்டு. இதுவே எல்லை தாண்டி சேர நாடு (கேரளா) சென்றால் இன்னும் மவுசு, உபரியாய் பவுசு, சொகுசு எல்லாம் கிடைக்கும். சற்று மேலே நகர்ந்து வடநாடு சென்றால்... சாரி அவ்வளவு இல்லை.


துபாய் பற்றி நமக்கு தெரிந்தது, இந்த துபாய் சென்று திரும்பி வந்த சில "தலைகள்" சொன்னது. அவர்கள் சொன்ன செய்தி கேட்டு, நாம் கூட பல சமயங்களில் அதிசயித்து இருக்கிறோம்.


போய் கொண்டே இருப்போம். பெட்ரோல் காலி ஆச்சுன்னா ரொம்ப கவலை பட மாட்டோம். சரின்னு சொல்லி வண்டிய நிறுத்திவிட்டு ஒரு தண்ணிர் பாட்டில எடுத்துட்டு, ரோட்டோரமா போய், மண்ணை தோண்டி பெட்ரோல் எடுத்து ஊத்தி வண்டியை ஓட்டிடுவோம்.


இதை அட்டகாசமாக நாம் அனைவரும் நம்பும்படி சொன்ன அதிபுத்திசாலி என்ற "அதிமேதாவி அங்குராசு" போன்றவர்களை உங்களுக்கு நிச்சயம் வேறு பெயரில் வேறு ஒரு நிகழ்வில் பரிச்சயம் இருக்கும்.


இன்னொரு விஷயம், இங்கு டீக்கடைகளில் எல்லாம் ஒட்டகப்பாலிலே தான், டீயே போடுவார்கள் (இது வடிவேலு, ஒரு படத்தில் சொன்ன டகால்டி), ஆனால், உண்மையில் பல அங்காடிகளிலே ஒட்டகப்பாலை பார்த்து இருக்கிறோம், அவ்வளவுதான், பருகிய அனுபவம் இல்லை.


எங்க ஊரு மச்சான் சொன்ன கதை இது. "இங்கே சாப்பாடு எல்லாம் பைப்புல வரும். ஒரு பைப்பு தொறந்தா பிரியாணி வரும், இன்னொரு பைப்பு தொறந்தா சாம்பார் சாதம் வரும்" என்று என் பொறாமை தீயை தூண்டியதும் அல்லாமல், "மட்டன் பீசு சிக்கிக்காது" என்ற போது "அது பெரிய பைப்பு" என்ற டகால்டி எல்லாம் நமக்கு அறிமுகம்.


இறை அருளால் துபாய் மண்ணை நேரில் பார்த்து, அங்கேயே வருடங்களாய் வாழும் பாக்கியம் வாய்த்ததால், பெட்ரோல், பிரியாணி தவிர வேறு பல விஷயங்களை பற்றியும் நேரடி தகவல் தர ஆசையும், அக்கறையும் உண்டு.


இத்தகைய தாக்கம் ஏன் வந்தது.
உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பதிக்கும். வெப்பக்காத்து காதை உரச, சாதிக்கும் மற்றும் பாதிக்கும் சில பல, பல, சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகிறேன்.

***************

முதலில், சொல்ல வேண்டுமானால், யார் யார் எல்லாம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருகிறார்கள்? எப்படிப்பட்ட வேலைக்கு வருகின்றார்கள்? இங்கு தற்போது நிலவும் சூழல் என்ன? தோள் தட்டி, புஜ பராக்கிரமம் காட்டி புறப்பட்ட அனைவரும், வெற்றி வீரர்களாக தாயகம் திரும்புகிறார்களா? மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ள நிறை மற்றும் குறை என்னென்ன என்ற பல விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள். கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பாளிகள், மற்றும் கடின உழைப்புக்கு தயாரான உழைப்பாளிகள் துபாய் (யு.ஏ.ஈ. என்ற நாட்டின் ஒரு நகரம்), கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள்.

(தொடரும் ............. )